Saturday, March 18, 2006

நீ என்னுள் இருக்கும் வரை

காய்ந்து வெடித்துப் போன
கரிசல்காட்டு பூமியாய்
மனது வெறுத்துப் போனது

பருவம் தவறினாலும்
என்றாவது பொழியும்
மழையாய்
நீ கொட்டி விடு


என் வெடித்த புண்களில் - நீ
சாரலாய் இறங்கி விடு

இளகி குழைந்திடும்
என் மணம்
நீ
என்னுள் இருக்கும் வரை.

-- விபாகை

Thursday, March 16, 2006

நீ புன்னகைத்தாய்

வானத்தாளில் மேக ஓவியம்
- நீ புன்னகைத்தாய்

சூரியத் தலைப்பாகையில்
வெள்ளிக்கோடுகள்
- நீ புன்னகைத்தாய்

ஒளிப்பட்டுத் தெறித்தன
புல்லின் பனித்துளி
- நீ புன்னகைத்தாய்

பனிக்குளியலில் தலை
சிலிர்த்த பூச்செடி
- நீ புன்னகைத்தாய்

அழகின் ஆணவத்தில்
நிமிர்ந்த மலர்கள்
- நீ புன்னகைத்தாய்

ஆசையின் ம்யக்கத்தில்
சுற்றித் திரிந்தன தேனிக்கள்
- நீ புன்னகைத்தாய்

மென்மையும் வன்மையும்
தான் கூடும் போல!
- நீ புன்னகைத்தாய்

ரீங்ங்ங்கார இசையில்
உறவின் பயணம்
- நீ புன்னகைத்தாய்

கலைப்பில் வாடிய மலர்
மற்றொன்றில் தேனி
- நீ மாறுகிறாய்....!

என்ன எண்ணம் உன்னுள் !
நானும் அப்படித்தானோ ?

-விபாகை

Wednesday, March 15, 2006

சுழல் செய்தி நான்கு

எனக்கு பிடித்த நாலு விசயங்கள்

பிடித்த 4 நபர்கள்:
1. அம்மா
2. என்னுள் உறைந்திருக்கும் ...........
3. என் அன்பு மனைவி
4. என் அன்பு மகள்


இருந்த 4 இடம்:
1. அருப்புக்கோட்டை - (பிறந்தது)
2. மதுரை - (சுற்றியது)
3. சென்னை - (வாழ்வை அறிந்தது)
4. பெங்களூர் - (வாழ்வை தேடித் தேடி...)


பிடித்த 4 இடம் :
1. அருப்புக்கோட்டையில் என் அம்மாவின் மடி
2. மதுரையில் டவுன்ஹால் ரோடு
3. சென்னையில் மெரினா பீச் - வாழ்வின் முடிவையும் ஆரம்பத்தையும் நான் இங்கே தான் உணர்ந்து கொண்டேன்
4. திருவண்ணாமலை - கோவில் ஆஹா என்ன அமைதி


போக விரும்பும் 4 இடம்:
1. இமாலய மலை அடிவாரம் - ரிஷிகள் இருப்பாங்களாமே?
2. சிங்கப்பூர் - சுறுசுறுப்பான அந்த மக்களைப் பார்க்கணும்
3. இராமேஸ்வரம்
4. கேரளா படகுகுடில்


பிடித்த, போக விரும்பும் 4 விடுமுறை இடம்:
1. கொடைகானல்
2. ஊட்டி
3. சிம்லா
4. குற்றாலம்


பிடித்த 4 உணவு:
1. பரோட்டா - குருமா (எங்க ஊருல இது பேமஸ்பா)
2. பூரி
3. கோழி வகைகள்
4. கடலை மிட்டாய் (ஐய் ..... எனக்கு ரொம்ப புடிக்கும்)


பிடித்த 4 விலங்கு:
1. புலி - என்ன லுக்கு தெரியுமா?
2. நாய்
3. பூனை
4. யானை.


பிடித்த 4 பறவை:
1. மயில்
2. புறா
3. பச்சைக் கிளி
4. காதல் பறவை ( லவ் பேர்ட்ஸ் தான்...)


பிடித்த 4 படம்:
1. தெய்வ மகன்
2. சலங்கை ஒலி
3. அன்பே சிவம்
4. டைட்டானிக்


பிடித்த 4 நடிகர்:
1. சிவாஜி (வேற யாரா இருக்க முடியும்)
2. கமல்
3. நாசர்
4. ரகுவரன்


பிடித்த 4 நடிகை:
1. சிம்ரன்
2. ஜோதிகா
3.
மீரா ஜஸ்மின்
4. ....... (இது இன்னும் காலியாகத் தான் உள்ளது)


சந்தோசமான 4 நிகழ்வுகள்:
1. என் மகள் பிறந்தவுடன் கைகளில் வாங்கிய அந்த இளகாலை வேளை]
2. ஒவ்வொரு ஓவியம் முடியும் போதும் ஏற்படும் திருப்தி
3. எனது கனணி மையம் மாவட்டத்தின் சிறந்த் மையமாக அறிவிக்கப்பட்டது
4. என் மகள் இந்த வருடம் பள்ளியில் சிறந்த மாணவியாக (ஆல்ரவுண்டர்) திடீர் என மேடையில் அருவித்த போது (அவர்கள் பள்ளியி எப்போதும் அப்படித் தான் அறிவிப்பது வழக்கம்)


பிடித்த 4 விசயங்கள்:
1. அடுத்தவர்களின் பிரச்சனைகளைக் கேட்டு தீர்வு சொல்வது... (நம்மல.. யாரும் கேட்க மாட்டேன்கிறாங்கப்பா)
2. நபர்களை ஆராய்வது (reading a person)
3. நிழற்படம்
4. வரைபடம்


என்னிடம் இருக்கும் எனக்கே பிடிக்காத 4 விசயங்கள்:
1. கோபம்
2. கோபம்
3. கோபம்
4. கோபம்


சோகமான 4 விசயங்கள்:
1. கும்பகோணம் தீ விபத்து
2. சுனாமி
3. என் பள்ளி நாட்களில் இறந்து போன என் உயிர் நண்பன் - கண்ணன்.
4. நான் பார்த்திராத என் தந்தை முகம் (நான் ஆறு மாத குழந்தையாக இருந்த போது என் தந்தை மரணம் அடைந்து விட்டார்.)


பிடித்த 4 நண்பர்கள்:
1. எஸ். எஸ். சுகுமாரன் (எலும்பு சிகிச்சை நிபுணன்)
2. தங்கபாண்டியன் (கார்பன் பேப்பர் தொழில்சாலை வைத்திருக்கிறான்)
3. பழனிக்குமார் (ஆசிரியன்)
4. அனைத்து நண்பர்கள்(முக்கியமாக வலை நண்பர்கள்)


அவ்வளவு தாங்க..... வேற என்ன எழுத.....
சரி சரி நீங்களும் தான் இது மாதிரி ஏதாவது எழுதுங்களேன்...

- விபாகை

Tuesday, March 14, 2006

இறைவனின்....


இறைவனின்
குழந்தைகள் நாம்
பசித்திருக்கிறோம் தாயே!
பாலூட்டு

ஞானப் பாலல்ல
தாய்ப் பாலாவது....

---- விபாகை

Sunday, March 12, 2006

முள்ளில்லா ரோஜா


உன் மனத் தோட்டத்தில்
என் உள்ள ரோஜாக்ளை
பதியமிடு
உன் அரவணைப்பில்
நான் செழிப்பேன்
உனக்கு மட்டும்
நான்
முள்ளில்லா ரோஜா...

- விபாகை

Saturday, March 11, 2006

காதல் கிறுக்கல்கள்

நண்பர்களே! இது ஒரே கவிதையல்ல!. வேறு வேறு நேரங்களில் எழுதியவை.

காதல் உலகின் முதல் மொழி.
அதுவே எமது தாய் மொழி.

என் பார்வையில்
உன் உருவம்
பதிந்ததும்
இமைகள் மட்டுமல்ல
என் இதயமும் துடித்தது.

----- 000 ------

சிரித்துக் கொண்டிருக்கிறாய்
பைத்தியமானது நான் தானே
நீ எப்படி?

----- 000 ------

இதயத்தை இமெயிலில்
அனுப்பி வைக்கிறேன்.
அப்படியாவது
உன் இன்-பாக்ஸில்
இருக்கட்டுமே.

----- 000 ------

உன் மெளனம்
என்னை புலம்ப வைத்தது
கவிதை.

----- 000 ------

சூரியனைக் கூட
சுட்டெரிப்பேன்
உன் மீது காய்ந்தால்.

----- 000 ------

சூரியன் சுட்டெரித்தால் கூட
சுகம் தான்
உன் முந்தானை நிழலில்.

----- 000 ------

அவள் காதலித்த போது
கிறுக்கலும் கவிதையாய்.
நீ திருமணம் செய்த போது
கவிஞனும் கிறுக்கனாய்.

----- 000 ------

செல்லறித்த
உன் நினைவுகளை
சொற்களில் கொட்டினேன்
கிளறிய மனக்குப்பைக்குள்
காதல் வாடை.



- விபாகை

ஏனோ சொல்ல நினைக்கிறேன் - 1


திருச்சி செல்ல வேண்டி பேரூந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தேன். கூட்டம் அதிகமாக இருந்திட சற்று விலகி நின்று கொண்டிருந்தேன். திடீரென பேரூந்திலிருந்து சத்தம்..... நீ யாருடா! அதை கேட்க! நான் சும்மா வருவேன். மூட்டையை தூக்கிட்டு வருவேன். வேணும்னா நீ பார்த்து போ!' என்று ஒருவர் கூறிட... அதற்கு மற்றவர் 'நீ மூட்டையை தூக்கிட்டு வா. இல்ல வீட்டையே தூக்கிட்டு வா...எனக்கு கவலை இல்ல! ஆனா யாரு மேலயும் இடிக்காம கொண்டு போ!' இது ம்ற்றவர். அதாவது முதலாமவர் கையில் மிக பெரிய பையோடு ஏறி இருக்கிறார். அது ம்ற்றவர் மேலே இடித்து விட..... அதற்கு மற்றவர் ஏதோ கூறிட அதன் விளைவு தான் மேலே உள்ள உரையாடல்.

உரையாடல் வ்ழுத்து முதலாமவர் பேரூந்திலிருந்து இறக்கி விடப்பட்டார். இறங்கியவர் என் அருகே வந்து நிற்க அவருடன் வந்த நண்பரும் கூடவே வந்து சேர்ந்தார். நண்பர் அவரிடம் 'ஏண்டா! நீ யாருடனும் கோபப்படவே மாட்டியே! இன்னைக்குஎன்ன ஆச்சு உனக்கு? என்று கேட்டார். அவரும் நடந்த தவறுக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டு 'இல்லடா! எனக்கே புரியல! நான் ஏன் இப்படி ந்டந்துக்கிட்டேன்னு?'என்றார். சிறிது நேரம் கழித்து 'காலையில, வீட்டுல என் வீட்டுக்காரியோட தொல்ல தாங்க முடியல.ஒரே அர்ச்சனை! உனக்கு தான் தெரியுமே, அவ பேச ஆரம்பிச்சுட்டா நிறுத்தவே மாட்டான்னு, இன்னைக்கு கொஞ்சம் அதிகம். உள்ளுக்குள்ளேயே இருந்த கோபம் இப்ப கொட்டிடுச்சு, மன்னிச்சிருடா! எனக்கே கஷ்டமா தான் இருக்கு' என்றார்.

நான் சிந்தித்து பார்த்தேன். இப்படித் தான் சில சிறிய வினாடிகளில் நாம் நமது சுய அறிவை இழந்து எத்தனையோ தவறுகள், அதுவும் நம்மையும், பிறரையும் வெகுவாக பாதிக்கும் செயல்களை செய்து விடுகிறோம். அது தவறு என்று உண்ர்ந்தாலும் காரியம் தான் முடிந்து விட்டதே? வருந்தினாலும் பயன் இல்லையே? தாங்க்ள் பொறுமை இழக்கும் முன் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே! நீங்கள் உங்கள் முகத்தை இழ்க்கப் போகிறீர்கள் என்று.

- விபாகை

இயற்கை இதைத் தான் செய்கிறது

இரவின் முடிவில் விடியல்
புயலின் முடிவில் அமைதி
குழப்பத்தின் முடிவில் தெளிவு
போராட்டத்தின் முடிவில் விடுதலை
தேடலின் முடிவில் உண்மை
உழைப்பின் முடிவில் வெற்றி
பிரிவின் முடிவில் புதிய உறவுகள்
இயற்கை இதைத் தான் செய்கிறது...

மாறாத கருத்தில்
மாறுதல் வேண்டாமே.....

--- விபாகை.

தமிழே! வணக்கம்

ஏனோ வலைப்பூ ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளா ஆசை. அது இன்று தான் நிறைவேறுகிறது..,

நன்றி தோழர். சிவாவிற்கு....


- விபாகை....

Related Posts Plugin for WordPress, Blogger...